Home செய்திகள் பெட்ரோலியம், எரிவாயுவுக்கு தட்டுப்பாடு இல்லை மத்திய அரசு திட்டவட்டம்!

பெட்ரோலியம், எரிவாயுவுக்கு தட்டுப்பாடு இல்லை மத்திய அரசு திட்டவட்டம்!

மத்திய அரசு இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தேவையான தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

தற்போது நாட்டின் இயற்கை எரிவாயு தேவையில் சுமார் 60 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. தற்காலிக மேலாண்மை நடவடிக்கையாக, சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிராமப்புறங்களில் ஒரு சிலிண்டர் பெற்ற 45 நாட்களுக்குப் பிறகும், நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்குப் பிறகும் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும். அதே நேரத்தில், மண்ணெண்ணெய் மற்றும் நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்கவும் அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

மக்கள் அச்சமடைந்து தேவைக்கு அதிகமாக முன்பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், விநியோகம் சீராக நடைபெறுவதாகவும் அரசு உறுதி அளித்துள்ளது.

Exit mobile version