அயோத்தி பாபர் மசூதி – ராமர் கோயில் வழக்கில் இந்து மகா சபையும் ஒரு மனுதாரராக இருந்தது. இதில் இந்துக்களுக்கு சாதகமான தீர்ப்புக்கு பிறகு அறக்கட்டளை ஏற்படுத்தி, அங்கு ராமர் கோயில் கட்டப்படுகிறது. இந்த அறக்கட்டளையில் இந்துமகா சபையினர் சேர்க்கப்படவில்லை. மேலும் கடந்த ஜனவரி 22-ல் பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட ராமர் கோயில் விழாவிலும் இவர்கள் அழைக்கப்படவில்லை. இதனால் கோபம் கொண்டு இந்த தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்க்க இந்து மகா சபை முடிவு செய்தது.
இதற்காக நிர்மோஹி அகாடாவை சேர்ந்த திருநங்கையான ஹிமாங்கி சகியை தங்கள் வேட்பாளராக நிறுத்தியது. நாடுமுழுவதிலும் உள்ள திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்க தாம் இங்கு போட்டியிடுவதாக ஹிமாங்கி சகி அறிவித்தார்.
தற்போது மனம் மாறிய இந்துமகா சபை அமைப்பினர், எந்தநிபந்தனையும் இன்றி தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். பிரதமர் மோடியை போட்டியின்றி தேர்ந்தெடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
