பங்குனி மாதமும், பங்குனி உத்திரத்தின் சிறப்பும்
தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். அந்த வகையில் இந்த வருடம் மார்ச் 25ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது.
பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது.
திருக்கோயில்களில் பங்குனி உத்திரம்
திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானை திருமணம்.
மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.
பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தை இந்நாளில் பெற்றார்.
தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.
சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம் இது.
ராமர் சீதையை மணந்தது, லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.
இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான்.
மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.
பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.
இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது.
அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில் தான்.
காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது இந்த நாளில் தான்.
தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.
ஆக இத்தகைய தனிச்சிறப்புகள் பெற்றது இந்த பங்குனி மாதம்.
