எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம் வள்ளிமலை வேலன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் V சேகர், “வள்ளிமலை வேலன் படத்தை வேலூர் வள்ளிமலையில் எடுத்துள்ளார்கள். இப்போது முருகன் சீசன்தான் போல, அரசியலிலும் முருகன் மாநாடு நடக்கிறது. சினிமாவிலும் முருகன் வந்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கேற்ற மாதிரி கதாநாயகன், காதாநாயகி பொருத்தமாக நடித்துள்ளனர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் எல்லோரும் நன்றாகச் செய்துள்ளனர். இப்போது படம் எடுப்பது பாதி வேலைதான், அதை புரமோட் செய்வதுதான் முக்கிய வேலையாக உள்ளது. அதைச் சரியாகச் செய்ய வேண்டும்.
நாங்கள் படம் எடுக்கும்போது எத்தனை பெரிய படமாக இருந்தாலும் 250 தியேட்டருக்கு மேல் தரமாட்டார்கள். ஆனால் இப்போது கேட்டை திறந்துவிட்ட மாதிரி 1000 திரையரங்குகளில் பெரிய படம் மட்டும்தான் ரிலீஸாகிறது. அப்புறம் எப்படி சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்கும். இது மாற வேண்டும். படத்தை நல்ல தியேட்டர் பார்த்து ரிலீஸ் செய்யுங்கள்” என்றார்.
