மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் நாளை(ஏப்.28) வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ்ராஜ், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் கைப்பற்றியுள்ளது. அதேபோல், உலகம் முழுவதும் லைகா நிறுவனமே நேரடியாக படத்தை வெளியிடுகிறது.
இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு தொடங்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ அட்வான்ஸ் புக்கிங்கில் இதுவரை 17 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது. முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதுண்டு. அதன்படி, நள்ளிரவு 1 மணி, அல்லது அதிகாலை 3, 4, 5 மணிக்கெல்லாம் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும். ஆனால், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்துக்கு சிறப்புக் காட்சி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இப்படத்தின் முதல் காட்சியே காலை 9 மணிக்கு தான் திரையிடப்படுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இதுகுறித்து மாவட்ட வாரியாக திரையரங்குகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
