அந்தமான் நிகோபார் தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள கிரேட் நிகோபார் பகுதியில் மத்திய அரசு செயல்படுத்தும் வளர்ச்சித் திட்டத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
“இன்று நான் கிரேட் நிகோபாரில் பயணம் செய்தேன்; என் வாழ்நாளில் நான் பார்த்த மிகச்சிறந்த காடுகள் இவை. பல தலைமுறைகளாக வளர்ந்த இந்த மரங்கள் வெட்டப்படவுள்ளன. அரசு இதை ஒரு ‘திட்டம்’ என்று அழைக்கிறது; ஆனால் நான் பார்த்தது என்னவோ கோடிக்கணக்கான மரங்கள் கோடாரிகளுக்காகக் காத்திருப்பதைத்தான்.

சுமார் 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மழைக்காடுகளைக் கொல்லத் துணிகிறார்கள். இங்குள்ள பழங்குடியின மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன; அவர்களின் வீடுகள் பிடுங்கப்பட்டுள்ளன. இது வளர்ச்சி அல்ல, வளர்ச்சியின் பெயரால் நடக்கும் அழிவு.
கிரேட் நிகோபாரில் நடப்பது இந்த நாட்டின் இயற்கை மற்றும் பழங்குடியின பாரம்பரியத்திற்கு எதிராகச் செய்யப்படும் மிகப்பெரிய ஊழல் மற்றும் குற்றம். இதை நிறுத்த வேண்டும்; இந்தியர்கள் அனைவரும் நான் பார்த்ததை உணர்ந்தால், நிச்சயமாக இதை நிறுத்த முடியும்” என்று ராகுல் காந்தி தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.

