நான் பள்ளியில், கல்லூரிகளில் , நூலகங்களில் படித்தபோதெல்லாம் இராமாயாணத்தை பல கோணங்களில் பயின்றிருக்கிறேன். ஆனால் புதுக்கோட்டை கம்பன் கழகச்செயலாளர் திரு.ரா.சம்பத்குமார் அவர்கள் கம்பன் கழக விழாவில் பேசியது மிகவும் வியப்பளித்தது. ராமாயண காதையில், காவிய நாயகன் ராமன் தன் எதிரிகளை “மன்னித்திருப்பதே சரி” என்கிற தலைப்பில் பேசியபோது,
அரக்கர்களுக்குச் சொந்தமான இடத்தில் இராமன் தரப்பினால் யாகசாலை நடத்தப்பட்டது. அங்கு தாடகை (இராவணனின் பாட்டி) மாமிசத்தையும், எலும்புத் துண்டுகளையும் வீசியதற்காக வதம் செய்யப்பட்டாள். வயது முதிர்ந்த பாட்டியை வதம் செய்தது ராமனுக்கு அழகா? அவளை மன்னித்திருக்கக்கூடாதா?
ராவணன் தங்கை சூர்ப்பனகை காதையின் நாயகன் ராமனின் அழகில் மயங்கியபோது, தான் ஏகபத்தினி விரதம் இருந்த அவதாரம் சரி. தன் தம்பியான இலக்குவன் பற்றி சிந்தித்திருந்தால், சூர்ப்பனகையை மணம் முடித்திருக்கலாமே! அப்படிச் செய்திருந்தால், இராமனுக்கு இராவணன் மைத்துனன் ஆகியிருப்பானே! சீதை இராவணுக்கு தங்கை முறையாகிருப்பாள். ஆகவே வேறு வழியின்றி சீதையை விடுவித்திருப்பானே!
மாரீசன் மாயமானாக மாறியபோது அதனைப் பிடித்துத் தருமாறு சீதை கேட்டபோது, அவனை ஏன் ராமன் தண்டித்தான்? வாலியை அன்போடு ராமன் அணுகியிருந்தால் அவனுக்காக தானே தன் பாசமிகு தம்பி சுக்ரீவனை மன்னித்திருப்பானே… அப்படியானால் ராவணனை விட பலசாலியான வாலியே, சீதையை மீட்க ராமனுக்குத் துணையாக வந்திருப்பானே..!? என்றெல்லாம் தன் வாதத்தினை முன்வைத்தார். இது முற்றிலும் புதிதான கோணம். ஆன்மீக அன்பர்கள் சிலரும், கம்பனின் படைப்பை சிலாகித்து பேசுவோருக்கும் இது முரண்சுவையாகத் தெரியலாம். ஆனால் ஒரு படைப்பிலக்கியத்தை அவரவர் கோணத்தில் ஆராய முனைவது கருத்து சுதந்திரமாக கொள்ளலாம். திரு.ரா.சம்பத் அவர்கள் தேர்ந்த திரைக்கதை ஆசிரியராக தன் திறமையை வெளிப்படுத்தினார்.
அவர் கம்பராமாயணத்தை முழுமையாக, உணர்வுப்பூர்வமாக உள்வாங்கியிருப்பதால் செக்கு மாடு போல் சுற்றிச்சுற்றி கருத்துரைக்காமல், ஒரு முரண்வாதத்திற்காக எதிர் பேச்சாளர்களை திணறடிப்பதற்காகவே பேசினார் என்று இலக்கிய, ஆன்மீகவாதிகள் பொருள் கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அவரது பேச்சைக்கேட்டு ஆன்மீகப்பேச்சாளர் மதுரை.முனைவர்.திரு.சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள் “நான் எத்தனையோ ராமாயணம் கேள்விப்பட்டுள்ளேன். சம்பத் இராமாயணத்தை இப்போதுதான் கேட்கிறேன்” என நிகழ்ச்சியில் கலகலப்பூட்டினார்.
