ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ‘ரிக்கட்ஸியா’ எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது, அவர்களுக்கு ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் ஏற்படுகிறது.
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள்- முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன. தற்போது தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்துார், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களில், அதிக அளவில், ‘ஸ்க்ரப் டைபஸ்’ பரவல் உள்ளது. அதேபோல் கிழக்கு தொடர்ச்சி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இத்தகைய பாதிப்பு காணப்படுகிறது.
விவசாயிகள், புதர் மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்போர், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணியர், பூச்சி கடிக்கு உள்ளாகும் சூழலில் இருப்போருக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ‘எலிசா’ ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் வாயிலாக நோயை கண்டறியலாம்.
‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்கு ‘அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின்’ போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் அளித்து சிகிச்சை அளிக்க வேண்டும். பின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்து பாதிப்புகள் ஏற்பட்டால் ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்.
தேவைப்பட்டால் உயர் சிகிச்சை மையங்களில் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதலின் கீழ் ‘ஸ்க்ரப் டைபஸ்’ பாதிப்புகளுக்கு, சிகிச்சை அளிப்பதை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
