19 ஆம் நூற்றாண்டு – சென்னையில் ஒரு சிவாலயத்தில் இறைத் தொண்டில் இன்புற்றிருந்த ஒரு குடும்பத்தலைவர் மற்றும் அவர் மனைவி. அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. ”அரங்கையர்” எனப் பெயரிட்டு, சீரோடும், சிறப்போடும் வளர்க்கின்றனர் பெற்றோர். அந்தக்குழந்தை வளர்ந்து பெரியவனாகும்போது ஆன்மீகச் சிந்தனையும், அனைத்து உயிர்கள் மீதும் அளவற்ற அன்பும்,
சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சாடும் சிந்தனையும் கொண்டு அரங்கையர் சிறந்து விளங்கினான்.
வேதநூல்கள், ஞானம் தரும் நன்னூல்கள், மனு சாஸ்திரம் என அனைத்திலும் விற்பன்னராக விளங்கி, சிவவழிபாட்டிலும் சிறந்தோங்கி சமூகத்தில் நற்பெயரெடுத்தான்.
”தத்துவ சாஸ்திரி”எனும் பட்டமும் ஞானியரின் கூட்டத்தால் அரங்கையரின் அறிவாற்றலுக்காக வழங்கப்பட்டது.
பருவ வயது வந்தது. திருமணம் செய்துவைக்கப்பட்டது.
சென்னையிலேயே பிருங்கி மாமுனிவர் தவம் தவம் செய்து வாழ்ந்த மலைப்பகுதியில் தன் குடும்பப்பிழைப்பிற்காக, குடியேறினார் “அரங்கையர்”.
இந்த “பிருங்கி மலை”யே பின்னாளில் புனித தோமையார் மலை என தமிழிலும்,
செயிண்ட் தாமஸ் மவுண்ட் என ஆங்கிலத்திலும், பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . சென்னை புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து, இந்த செயிண்ட் தாமஸ் மவுண்ட்டிற்கு வரும் ஒரு பாதையை ஆங்கிலேயர்கள் அமைத்து, அதனை வெகுவாகப் பயன்படுத்தினர். அதுவே ….. இன்று “மவுண்ட் ரோடு” என அழைக்கப்படுகிறது. இந்த பிருங்கிமலைக்கு குடியேறிய அரங்கையர் தம்பதிக்கு 1835 ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
சிவனருளால் மழலை பாக்கியம் சித்திக்கப் பெற்றதால்,“சிவலிங்கம்” என்றே பெயரிட்டு சீரோடு வளர்த்தனர்.
