முகவுரை …
திரைப் படக் கலை …
பல கலைகள் கூட்டணி போட்டு மக்கள் மனதில் இன்றும் ஆட்சி செய்யும் அற்புதக் கலை!
மனிதன் நாகரீகம் பெற்றபோது அவனது ஆத்மா பேசிய மொழியே பல கலை வடிவங்களாக பரிமளித்தன…! இசை .. பாடல்….. ஓவியம்…
சிற்பம்… நாட்டியம் … எழுத்து … கூத்து… ஒப்பனை … உடை அலங்காரம்… என்று கோலோச்சிய தனிக் கலை வடிவங்கள் விஞ்ஞான வளர்ச்சிகளால் உருவான கருவிகளோடு சேர்ந்து திரைப்பட கலையாக புது மாற்றம் பெற்றன …! பார்த்ததை வரையும் ஓவியக்கலை தந்த உத்வேகத்தில் மனிதன் பார்த்ததை படமெடுக்கும் விஞ்ஞான வித்தையை கற்றான் !
சிலையாக இருந்த படங்கள் உயிரோட்டமாக திரையில் தொடர் படமாக ஓடும் விந்தையை உருவாக்கினான்!.
மௌன மொழி பேசிய திரைப்படங்களை அந்தந்த நாட்டின் மொழி பேசும் ஒலி… ஒளி பெட்டகங்களாக மாற்றினான்..
அன்னிய மண்ணின் விஞ்ஞான சாதனங்களோடு …அந்தந்த மண்ணின் கலைப் பிரவாகங்களும் கை கோர்க்க … இன்று திரைப்படங்கள் மனிதனின் அத்தியாவசிய பொருட்கள்.. பட்டியலில்.. முதலிடம் பிடித்து .. உலகை ஆள்கின்றன….
வருவாய் ஈட்டும் பெரிய தொழிலாக … மக்களின் வாட்டம் போக்கும் பொழுது போக்கு சாதனமாக …. நாட்டின் வரலாற்றை மாற்றும் கருத்துப் பெட்டகமாக … லட்சக்கணக்கான கலைஞர்களின் ஜீவ ஆதாரமாக …. வற்றாத நதியாக திரைப்படக்கலை துள்ளி ஓடுகிறது..
இதில்.. தமிழ் மொழியின் பங்கென்ன?
கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த மொழி இந்த நவீன கலை வடிவில் பின் தங்குமா என்ன?
மௌனப் படங்களின் காலத்திலேயே பிள்ளையார் சுழி போட்டு … 100 வருடங்களையும் தாண்டி … வருடத்துக்கு 100 படங்களை உருவாக்கி வருகிறதே தமிழ் திரைப்பட உலகம்..! திரைப் படக் கலையில் ஆளுமை கண்டவர்களை நாட்டையே ஆள இடம் தந்த சரித்திர நிகழ்வுகள்.. தமிழ் மண்ணுக்கே உரிய பெருமை இல்லையா? திரைப்பட கலையில் …தமிழில் வெற்றி சாதனை கண்ட இயக்குனர்களைப் பற்றிய ஒரு காலச் சுவடு தான் இந்தத் தொடர் …
இதில் முதல் அத்தியாயத்தில் இடம் பெறப் போகிறவர்..
மூன்று முதல்வர்களின் படங்களை இயக்கியவர்..
அவர் ?
(தொடரும்)
-எழுத்து, இயக்கம்- நித்தியானந்தம்.
