பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாக்காலங்களில் 10 நாட்கள் காலை மற்றும் இரவு நேரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய சுவாமிகள் வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் நேற்று (நவ. 23) நடைபெற்றது.
காலை விநாயகர் தேரோட்டமும், மதியம் வள்ளி தெய்வானை சமேத முருகரின் திருத்தேரோட்டமும் நடைபெற்றது. மாலை 5.15 மணிக்கு பெரியத் தேர் என அழைக்கப்படும் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை காண திருவண்ணாமலை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
பின்னர் பக்தி முழக்கமிட்டு கைலாச வாத்தியம் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இந்நிலையில், திருத்தேரேர் புறப்பட்டு வந்துகொண்டிருந்த போது, திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் நிலையம் எதிரே உள்ள பழக்கடை, துணிக் கடைகளில் இருந்த பக்தர்கள் மீது திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதனால் அலறியடித்து பக்தர்கள் சிலர் மாடியில் இருந்து கீழே குதித்து ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். பலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 8 பேர் மட்டும் 2 ஆம்புலன்ஸ் வாகனங்களில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் தேரோட்டத்தில் பெரும் பதட்டமான சூழல் நிலவியது. சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு தேரோட்டம் தொடங்கியது.
