தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து இருக்கும் திட்டை குரு பகவான் ஆலயம்
மிகவும் பிரசித்திப்பெற்றதாகும்.
இந்தத் தலத்தில் உள்ள குரு பகவானை வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்து சிவனை பூஜித்ததால் வசிஷ்டேஸ்வரர் எனப்பெயர் பெற்றார். அம்பாள் நாமம் உலகநாயகி. குரு பகவானை வசிஷ்ட மகரிஷி ராஜ குருவாக வழிபட்டதால் இத்தலம் குரு பகவான் தலமாக உள்ளது. இங்கு வேண்டிக்கொள்ள குரு தோஷம் நீங்கும். கல்வி செல்வங்களில் சிறக்கலாம்.
மேலும், குரு பகவானுக்கு திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் தனி சன்னிதி அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக கொண்டாடப்படும். இங்கு வந்து வணங்கி வழிபட்டு நலம் பெறலாம்.
தன்னை வழிபடுபவர்களுக்கு, உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை அருள்பவர் குரு பகவான். அதோடு, கல்லீரல், காது, இடுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு இவரை வேண்டினால் தீர்வு கிடைக்கும். வியாழக்கிழமை விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி குருவிற்குரிய வஸ்திரம் சாத்தி, தானியம் வைத்து வழிபட்டால் நன்மைகள் நம்மை நாடி வரும்.
