அவதூறு வழக்கில் தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா சென்னையில் கைது .. இவர் தமிழக மாநில தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். எஸ்.ஜி. சூர்யா அண்ணாமலையுடன் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் கூட செய்துள்ளார்.
மேலும், பாஜக சார்பில் ஊடக விவதாங்களிலும் சூர்யா பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், மதுரையில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளர் உயிரிழந்தார் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக கூறி மதுரை சைபர் கிரைம் போலீசார் நேற்று நள்ளிரவில் எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர்.
நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் அறிந்த பாஜகவினர், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்தனர்.
சூர்யா கைதை கண்டித்து திடீரென பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இந்த கைது சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டறிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
