Home Uncategorized தமிழகத்தில் ஒரே நாளில் 24¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை

தமிழகத்தில் ஒரே நாளில் 24¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை

தமிழகம் முழுவதும்  கொரோனா நோய் பரவுவலை தடுக்கும் வகையில், அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, ஒரே நாளில் பலருக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 3-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முழுவதும் நேற்று 20 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இந்த முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக 29 லட்சம் ‘டோஸ்’ தடுப்பூசி அனைத்து மாவட்டங்களுக்கும் தேவைக்கேற்ப பிரித்து வழங்கப்பட்டிருந்தது.

காலை 7 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த தடுப்பூசி மையங்கள் பலவற்றில் தொடர்ந்து பொதுமக்கள் வரிசையாக காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட 15 லட்சம் பேர் என்ற இலக்கு மதியம் 2.15 மணிக்கே கடந்து தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டது. அந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 24 லட்சத்து 85 ஆயிரத்து 814 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 லட்சத்து 90 ஆயிரத்து 814 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 9 லட்சத்து 95 ஆயிரம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

சென்னையில்  2 லட்சத்து 13 ஆயிரத்து 763 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கடலூரில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 590 பேருக்கும், கோவையில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 618 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த மெகா தடுப்பூசி முகாமுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென வந்தார். தடுப்பூசி போட வந்தவர்களிடம் போதிய வசதிகள்உள்ளதா? என்று மு.க.ஸ்டாலின் கேட்டு அறிந்து கொண்டார். மேலும் அங்கிருந்த சுகாதார ஊழியர்களிடம் இதுவரை எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்? என்று கேட்டறிந்தார்.

தமிழகத்தில் சென்னையில் அதிகமான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து கடலூரில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 590 பேருக்கும், கோவையில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 618 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Exit mobile version