Home சினிமா செப்டம்பர் 1 முதல் அறிவித்திருந்த திரைப்படத் துறை வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்!

செப்டம்பர் 1 முதல் அறிவித்திருந்த திரைப்படத் துறை வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்!

திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களின் ஒருதரப்பான நிபந்தனைகளுக்கு எதிராகவும், திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்ற விதிமுறை தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகளினாலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் (TFPC) மற்றும் தயாரிப்பாளர் நலச் சங்கம் ஆகியவை இணைந்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய திரைப்பட வெளியீடு, படப்பிடிப்பு மற்றும் பின்னணி வேலைகளை நிறுத்தப்போவதாக அறிவித்தன.

இந்தத் திடீர் போராட்ட அறிவிப்பால் தினக்கூலி திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) தலைவர் ஆர். கே. செல்வமணி தயாரிப்பாளர்களின் போராட்ட முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும், தமிழக அரசு தலையிட்டுச் சுமூகத் தீர்வு காணுமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, திரைப்படத்துறையின் அனைத்துத் தரப்பு நலன்களையும், தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டும், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு காண்பதற்காகவும், திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

Exit mobile version