தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து, பொதுப்பிரிவில் சிறப்புப் பிரிவுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வும் அடுத்தடுத்து நடத்தப்படவுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை இன்று காலை 10 மணி முதல் தேர்வு செய்யலாம் என்றும், அவ்வாறு தேர்வு செய்த கல்லூரிகளுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வரும் ஜூலை 15-ஆம் தேதி காலை 7 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
