Friday, June 12, 2026
Homeசெய்திகள்ஜூலை 1 முதல் புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்.. தமிழக அரசு ஒப்புதல்!

ஜூலை 1 முதல் புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்.. தமிழக அரசு ஒப்புதல்!

மத்திய அரசின் புதிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டமான ‘விபி ஜி ராம் ஜி’ (VB-G RAM G – Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission) திட்டத்தைத் தமிழகத்தில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் செயல்படுத்துவதெனத் தமிழக அரசு கொள்கை ரீதியாக அதிரடி முடிவெடுத்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாகக் கொண்டு வரப்பட்டுள்ள இப்புதிய திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற புதிய நிதிப் பகிர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்புதிய விதியின்படி, மத்திய அரசு தனது பங்காகத் தமிழகத்திற்கு ₹7,585.49 கோடியை இடைக்கால நிதியாக ஒதுக்கியுள்ள நிலையில், மாநில அரசு தனது 40 சதவீதப் பங்களிப்பாக இந்த நிதியாண்டின் எஞ்சிய 9 மாதங்களுக்கு மட்டும் ₹3,034.19 கோடியை வழங்க வேண்டியுள்ளது.

இந்தத் திட்டத்தை முழுமையாகத் தொய்வின்றிச் செயல்படுத்தி மாநிலத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஆண்டுதோறும் கூடுதலாகச் சுமார் ₹4,500 கோடி முதல் ₹5,000 கோடி வரையிலான கூடுதல் நிதி ஒதுக்கீட்டைத் (Additional allocation) தமிழக அரசு தங்களின் சொந்த மாநில நிதியிலிருந்து வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மாநிலப் பொருளாதாரத்திற்குச் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்ற போதிலும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் வேலைவாய்ப்பு உரிமையையும் பாதுகாக்கும் உன்னத நோக்கோடு இத்திட்டத்தைத் திட்டமிட்டபடி அடுத்த மாதம் முதல் அமல்படுத்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு முன்வந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments