ஒவ்வொரு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் எவ்வளவு தடுப்பூசிகள் போடப்படும் என்ற விவரம் அறிவிப்பாக வெளியிடப்படும்.
தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே முதல் முறையாக சி.எஸ்.ஆர். பங்களிப்பில் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் தொடங்கி வைத்துள்ளார்.
இந்தியாவிலேயே முன் மாதிரி முயற்சியாக இது அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
காவேரி மருத்துவமனையில் தடுப்பூசி போட வந்தவர்கள்.
அதன்படி நாளை முதல் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இத்திட்டம் தொடங்கப்படும். எந்தெந்த தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்ற விவரம் அந்தந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்படும். இது பற்றிய விவரங்கள் இணைய தளத்திலும் வெளியிடப்படும்.
பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அந்த பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து அவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் 25 சதவீத கோட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது சம்பந்தமாக திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இருந்து மருத்துவமனைகள் சார்பில் 107 பிரதிநிதிகளும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் இருந்து 137 மருத்துவ பிரதிநிதிகளும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் சி.எஸ்.ஆர். உடன் இணைந்து இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. தனியார் ஆஸ்பத்திரிகளுடன் சி.எஸ்.ஆர். பங்களிப்பு பணிகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி போட உதவுவார்கள்.
எந்தெந்த பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர். பங்களிப்பை வழங்க முன் வருகிறார்களோ அங்கு இலவசமாக தடுப்பூசிகள் போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
