வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், வருகிற நவம்பர் 3-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. எனினும், கடலூரில் தொடர் கனமழையால் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இதுபற்றி கடலூர் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.
கனமழை எதிரொலியாக நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடலூரில் தொடர் கனமழை எதிரொலியாக பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று விழுப்புரத்திலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
