முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளும் இன்றைய தேதியோடு முழுமையாக மூடப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த இந்தக் கடைகள் அனைத்தும் அரசாங்கத்தின் அதிரடி உத்தரவால் இழுத்து மூடப்பட்டாலும், எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்தக் கடைகள் மூடப்பட்டுள்ளன, அவற்றின் எண்கள் என்ன, முகவரிகள் என்ன என்பது போன்ற எந்தவொரு அதிகாரப்பூர்வமான லிஸ்ட்டையும் டாஸ்மாக் நிர்வாகமோ அல்லது அரசோ இதுவரை பொதுமக்களுக்கு வெளியிடவில்லை.
“நாங்க சொன்னபடி 717 கடைகளையும் பூட்டியாச்சு” என்று அரசு தரப்பில் கெத்தாகச் சொன்னாலும், “அப்படிப் பூட்டப்பட்ட அந்த மர்மக் கடைகள் எங்கேதான் இருக்கின்றன?” என்று குடிகாரப் பெருமக்களும் சமூக ஆர்வலர்களும் முகவரியே இல்லாத அந்தப் பட்டியலைத் தேடி அலைவதுதான் தற்போதைய ஆகப்பெரும் வேடிக்கை. கடைகள் மூடப்பட்டதில் மகிழ்ச்சி என்றாலும், எந்தத் துப்புமே இல்லாமல் ரகசியமாகச் செயல்படும் இந்தத் ‘டாஸ்மாக் க்ளோசிங்’ விவகாரம், சமூக வலைதளங்களில் பலரது கிண்டலான விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
