ஆதியும் அந்தமும் மார்கழி 1
ஆதியும் அந்தமும்
இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்
கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ
வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள்
வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே
விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல்
நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்
என்னே என்னே
ஈதே எந்தோழி
பரிசேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ?
அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!
