தமிழகத்தில் உள்ள சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை மடத்தின் ஆதின கர்த்தர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “குறிப்பிட்டதொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் சொன்னதாகச் சில அறிக்கைகளைக் கண்டோம். 1947-ல் ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் செங்கோல் வழங்கப் பெற்றது குறித்த வரலாற்றைப் பொய் என்று இந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி கூறியதாகத் தெரியவருகிறது.
ஆட்சி மாற்றத்தின்போது அதனை அடையாளப்படுத்துகிற சடங்கினைச் செய்விக்க அழைக்கப் பெற்றோம் என்பது நம்முடைய ஆதீனத்தின் பதிவுகள் உட்பட, பலவகையான ஆதாரங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜாஜியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நம்முடைய ஆதீனகர்த்தர், தங்க செங்கோல் செய்வித்து முறையான சடங்குகளில் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் அதைக் கொடுத்து வாங்கி, தொடர்ந்து செங்கோலைப் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்கச் செய்தார்கள். பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கிய தமபிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் சின்னம் என்பதையும் தெளிவாகத் தெரிவித்தார்.
அரசியலுக்காக, அரசியல் ஆதாயங்களுக்காக இந்தச் சடங்குகளும் நிகழ்வுகளும் பொய் அல்லது போலி என்று கூறுதல், எமது நம்பிக்கைத் தன்மையின் மீது ஐயம் எழுப்புதல், ஆட்சி மாற்றத்தின் அடையாளம் செங்கோல் என்பதன் முக்கியத்துவத்தைக் குறைக்க முயலுதல் ஆகியவை மிகுந்த வருத்தத்திற்குரியவை, தவிர்க்கப்பட வேண்டியவை” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
