Home Uncategorized திருவெம்பாவை-பாடல் 13

திருவெம்பாவை-பாடல் 13

பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

பொருள் : 
கரிய நிற குவளை மலர்கள் குளத்தின்  நடுவிலே உள்ளன. அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன. இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள். அவர்கள் நமசிவாய என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள். இந்தக் காரணங்களால், இந்தக் குளம் எங்கள் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப, மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.

விளக்கம் : 
கரிய நிறம் கொண்டவள் அம்பிகை. இதனால் தான் அவளை சியாமளா என்கிறோம். சியாமளம் என்றால் கருநீலம். சிவந்த நிறமுடையவர் சிவபெருமான். மாணிக்கவாசகர் தன் தெய்வீகப் பார்வையால் கரிய குவளை மலர்களை அம்பிகையாகவும், தாமரையை சிவனாகவும் பார்க்கிறார். சாதாரண குளத்தில் உடல் அழுக்கு நீங்கும். பக்தி குளத்தில் மன அழுக்கு நீங்கும் என்பது அவரது இனிமையான கருத்து.

Exit mobile version