Home Uncategorized ஊட்டி மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு சொந்தமான நிலம் மீட்பு

ஊட்டி மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு சொந்தமான நிலம் மீட்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் வருவாய் துறையினருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 120 ஆண்டு காலமாக மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயங்களை நடத்தி வந்தது. இந்த குதிரை பந்தயங்களானது உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

இந்நிலையில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகமானது அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை கடந்த 1978 முதல் கட்டாமல் இருந்துள்ளது.இதுவரை 822 கோடி ரூபாய் வரை குத்தகை தொகையானது நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கானது நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 21.6.2024 அன்று மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு வருவாய் துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.ஆனால் அந்த நோட்டீஸ்க்கு மெட்ராஸ் கிளப் நிர்வாகமானது பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ் தலைமையில் காவல்துறையினர் உதவியுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் நிலத்தினை மீட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

பாக்கி தொடர்பான பிரச்னையில் வருவாய்துறையினர் , ரேஸ் கோர்ஸ் மேலாளரிடம் நோட்டீஸ் வழங்கி சீல் வைத்தனர். தொடர்ந்து ரேஸ்கோர்சை சுற்றி ஆங்காங்கே இந்நிலம் அரசுக்கு கையகப்படுத்தப்பட்டது என்ற பேனர் வைத்தனர். மேலும் குதிரை பந்தயம் மைதானத்திற்குள் உள்ள அலுவலக கட்டிடங்கள் நிர்வாக கட்டிடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன.

மேலும் எந்த விதமான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Exit mobile version