தன் வீரத்தால் ஆங்கிலேயரை வெற்றிகொண்ட வீரப் பெண்மணி வேலு நாச்சியார் 1730ம் ஆண்டு ஜனவரி 03ம் தேதி ராமநாதபுரம் அடுத்த சக்கந்தி என்ற ஊரில் பிறந்தார்.
இவர் கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்து திறன்களையும் கற்றுத் தேர்ந்தார்.
சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரை 16வது வயதில் மணந்து, பட்டத்து ராணியானார். வடுகநாதர் ஆற்காட்டு நவாபுக்கு கப்பம் கட்ட மறுத்ததால், நவாபின் படைகள் சிவகங்கை மீது போர் தொடுத்து மன்னர் வடுகநாதரை தாக்கிக் கொன்று, காளையார்கோட்டையை கைப்பற்றி விட்டார்கள்.
பிறகு ராணி சின்ன மருது, பெரிய மருது தளபதிகளின் துணையோடு தப்பிச் சென்று ஹைதர் அலியின் உதவியை நாடினார். சில ஆண்டுகாலம் கழித்து ஆங்கிலேயரை தாக்க உரிய நேரம் பார்த்து வேலு நாச்சியாரும் அவரது மகளிர் படையும் அரண்மனைக்குள் புகுந்து, திடீர் தாக்குதல் நடத்தி, கோட்டையைக் கைப்பற்றினர்.
சரித்திரப் புகழ்வாய்ந்த இந்த வெற்றி கிடைத்தபோது இந்த வீரமங்கைக்கு 50 வயது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி இவர்தான்.
ஆங்கிலேயேரின் கொடி இறக்கப்பட்டு அனுமன் கொடி ஏற்றப்பட்டது. சிவகங்கை அரசியாகப் பதவியேற்றார்.
இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்ட வீராங்கனை வேலு நாச்சியார் தனது 66வது வயதில் மறைந்தார்.
