கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 66 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது..!!
மதுவால் சமுதாயத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகள், தீங்குகள் ஏற்படும் என்பதற்கு கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது என்றும்…
காவல்துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை என்றும்…
மாநில காவல்துறையினர் கண்டும் காணாமலும் இருந்துள்ளதை இந்த சம்பவம் தெளிவாக்குகிறது என்றும்…
காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அரசு திரும்பப் பெற்றது தவறு என்றும்…
சிபிசிஐடி விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் வழங்க வேண்டும் என்றும்…
தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்…
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளில் பெரும்பாலானவை தமிழக காவல்துறையின் நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
தமிழக காவல்துறை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி கண்காணிப்பிலும் அவரது கட்டுப்பாட்டிலும் இயங்கி வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வரின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வருகிற ஒரு துறை குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவிக்கிறது என்றால் அது மாநில அரசின் செயல்பாடற்ற, சீர்கெட்ட நிர்வாகத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் நம் கண் முன்னால் நடந்து முடிந்து ஒரு கொடிய துயர சம்பவம் என்றால்..!!
போதைப்பொருள் பரவலாக்கல் காரணமாக நாள் தோறும் தமிழகத்தில் அரங்கேறி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் பள்ளி, கல்லூரி , மருத்துவமனை என மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களும் தமிழகம் ஆபத்தான சூழலை நோக்கி சென்று கொண்டிருப்பதை நமக்கு உணர்த்தும் எச்சரிக்கை நிகழ்வுகளாகும்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த போதே சிபிஐ வசம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பில் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
ஆனால் தமிழக முதல்வர் அன்று செவிசாய்க்கவே இல்லை. ஆனால் இன்று உயர்நீதிமன்றம் சிபிஐ வசம் வழக்கு விசாரணையை ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தமிழக மக்களின் ஒவ்வொரு பிரச்சனைக்கும், தேவைக்கும் நீதிமன்றத்திற்கு சென்று தான் தீர்வு காண வேண்டும் என்கிற நிலையில் தமிழகம் இருப்பதும் அதற்கு திமுக அரசு காரணமாக இருப்பதும் மறுக்க முடியாத உண்மை.
தமிழக முதல்வர் தன் குடும்ப மக்களின் மீது காட்டும் அக்கறையை தனக்கு வாக்களித்த தமிழக மக்களின் மீதும் காட்டினால் நன்றாக இருக்கும்.
– திரு.H.ராஜா
ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர்
