வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கியுள்ள, ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரியும், முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான வெங்கடாசலம் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அம்மம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், 63. 1983ல் ஐ.எப்.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி பெற்று, வனத்துறையில் சென்னை உட்பட பல இடங்களில் பணிபுரிந்தார். சுற்றுச்சூழல் இயக்குனராக பணிபுரிந்து, 2018ல் ஓய்வு பெற்றார்.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 2019ல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இவர், அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த செப்டம்பரில் இவரது சொகுசு பங்களா, அலுவலகம் என, ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 13.50 லட்சம் ரொக்கம், 6.5 கிலோ தங்கம் மற்றும் சந்தன மர பொருட்களை கைப்பற்றி உள்ளனர்.இதையடுத்து, வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார், சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தலைமை செயலக காலனியில் உள்ள வீட்டில் வெங்கடாசலம் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
