சென்னையில் உள்ள வடபழனி பழனி திருக்கோயில் மிகவும் புகழ்பெற்றதாகும். இது தமிழக இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில். இக்கோயிலுக்கு வருகின்ற 23-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என அக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கில் கோவில் மூடப்பட்டதால் கோவில் புணரமைப்பு பணிகள் தாமதமானது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் கோவில் திறக்கப்பட்டு முழுவீச்சில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.
தற்போது இந்த திருப்பணிகள் முழுவதுமாக முடிவடைந்து கும்பாபிஷேகத்துக்காக கடந்த மாதம் 13-ந்தேதி யாகசாலை முகூர்த்தக்கால் நடப்பட்டது.
கோவில் முழுவதும் வர்ணம் பூசி, புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கும்பாபிஷேகத்துக்கு தயார் நிலையில் உள்ளது.
கும்பாபிஷேக விழாவின் போது பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வந்து யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். இதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி, துங்கபத்ரா, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளில் இருந்தும், ராமேஸ்வரம் தீர்த்தக் கிணற்றில் இருந்தும் மற்றும் முருகனின் அறுபடை திருத்தலங்களில் இருந்தும் மொத்தம் 15 இடங்களில் இருந்து புனித நீர் வடபழனி முருகன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
இவை அனைத்தும் புதிய பித்தளை குடங்களில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது. வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று யாகசாலையில் வைக்கப்பட உள்ள 1300 கலசங்களில் புனித நீர் பகிரப்படும்.
அதன் பிறகு யாக வேள்வி பூஜைக்கு பின்னர் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களிலிலும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும்.
