நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜக்தீப் தன்கர் நேற்று திடீரென ராஜினாமா செய்தார். 2027ம் ஆண்டு ஆக.10ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிய இருந்தது. ஆனால் பதவிக்காலம் முடியும் முன்பே பதவியை ராஜினாமா செய்து விட்டார். உடல்நிலையை காரணம் காட்டி தமது பதவியை தன்கர் ராஜினாமா செய்வதாக அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆனால் கடந்த ஜூலை 10ம் தேதி பல்கலை. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தன்கர், 2027ம் ஆண்டு வரை பதவியில் இருக்க போவதாகவும், அதன் பின்னர் ஓய்வு என்பது சரியாக இருக்கும் என்றும் கூறி இருந்தா நிலையில் இந்த திடீர் மனமாற்றம் குறித்த தகவல் ஆராயப்பட்டு வருகிறது.
அதே சமயம் பார்லிமெண்ட் கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருக்கும் இத்தருணத்தில் அவரது ராஜினாமா பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தாலும் அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்த பட்டியலில் தற்போது பலரின் பெயர்கள் அடிபடத் தொடங்கி இருக்கின்றன. அவர்களில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பெயர் முக்கியமானதாக கருதப்படுகிறது. மனோஜ் சின்ஹாவை தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சரும், பா.ஜ., தலைவருமான நட்டா பெயர் பட்டியலில் இருக்கிறது. இவருக்கு அடுத்தபடியாக, பீஹார் கவர்னர் ஆரிப் முகமதுகான், ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்வரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
துணை ஜனாதிபதி எப்படி தேர்ந்து எடுக்கப்படுகிறார் என்பதற்கான சில வழிமுறைகள் இருக்கின்றன. இவர் பார்லி.யின் இரு அவைகளின் உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் குழுவால் தேர்ந்து எடுக்கப்டுகிறார். இரு அவைகளின் எம்.பி.,க்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம், ஒற்றை மாற்று வாக்கு அடிப்படையில் வாக்களித்து துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுக்கின்றனர்.
