(யானையைப் பற்றிய முந்தைய கட்டுரையில், அதன் மூதாதை இனமான ”மமூத்” முதல் நம் தமிழகத்தின் சங்ககாலத்தில் யானையின் பெருமைகள் வரை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக…)
மன்னர்களும் யானைகளும்:
“உலகமகாவீரன்” என்று சொல்லப்பட்டு, இந்தியாவின் வடமேற்குப்பகுதிவழியாக ஊடுருவிய, கிரேக்க நாட்டு மன்னன் ”அலெக்ஸாண்டர்” தன் படையெடுப்பின்போது போர்க்களத்தில் இந்திய மன்னர்களின் யானைப்படையை கண்டு அஞ்சினான் என்பது வரலாறு. எப்படி ”ஆடுகள், மாடுகள், குதிரைகள்” ஆகியன ஒரு மன்னனுக்கு வளமோ அதனினும் மேலாக யானைப்படை கூட சிறந்த வளமாகவும், பலமாகவும், கெளரவமாகவும் யானைகள் விளங்கியுள்ளன.
தமிழகத்தில் சோழர்கள் காலத்தில் “யானைப்படை” பெரும் பங்களிப்பு நிக்ழத்தியுள்ளது. மாமன்னன் ராஜராஜசோழனின் ஆணைக்கிணங்க இமயம் வரை படை நடத்திச்சென்ற அவனது மகன் ராஜேந்திர சோழன்இமயம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியுள்ளான். அவன் கடல் கடந்து சென்று இன்றைய தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளை வென்று சோழர்களின் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினான் என்கிறது வரலாறு. அவன் அவ்வாறு படைகளை கப்பல்களில் அழைத்துச்செல்லும்போது, தன் கூடவே பலநூறு யானைகளையும் ஏற்றி, அவற்றிற்கான உணவு வகைகளையும் கொண்டு சென்றதோடு மட்டுமின்றி, அவை பெருங்கடலின் சீற்றத்தினைக்கண்டு அஞ்சாமலும், அவற்றிற்கு மதம் பிடிக்காமலும் பார்த்துக்கொண்டு போரில் வெற்றி பெற்று மீண்டும் தாய்த்தமிழகத்திற்கு திரும்பியிருப்பான் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை!
தமிழகத்தின் சேர, பாண்டிய பல்லவ மன்னர்களும்கூட யானையை கெளரவித்து, அவற்றை பேணிப்பாதுகாத்திருக்கின்றனர் என்பதும் கண்கூடு.
யானைகளும் கோவில்களும்:
ஆன்மீகத்துடன் கணித அறிவியலும் தொடர்புடைய “ஜோதிட சாஸ்திரம்” ஒரு கட்டத்தில் எழுச்சியுற்றபோது, ஒருவரின் ஜாதகத்தில் ”கஜகேசரி யோகம்” என்கிற ஒன்று பிரதானமாக விளங்கியது. இன்றும் கூட அது நடைமுறையில் இருந்து வருகிறது. அதாவது ”யானைகள் கூட்டத்தில் ஒரு சிங்கம்போன்று” என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கென யாகங்களும் பூஜைகளும் செய்யப்படுகிற வழக்கங்கள் உருவாகியுள்ளன. இதன் அடிப்படையில் இந்த யோஒகம் வலுவாக இருப்பவர்கள் கோவில்களுக்கு யானைகளை தானமாக வழங்குவதும் உண்டு. தமிழ்த்திரையுலகின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தஞ்சை, திருவானைக்காவல் உள்ளிட்ட பல கோவில்களுக்கு யானைகளை தானமாக வழங்கியுள்ளார். அன்னதானம், வஸ்திர தானம், கோ தானம் போன்றவைற்றைப்போலவே கஜ (யானை)தானமும் விசேஷமானது. போரில் யானைப்படை பயன்படுத்தப்பட்டபோதும், பொதுவாக அக்காலத்தில் பிரமாண்டமான கோவில்களின் கட்டுமானங்கள், பிற கட்டுமானங்கள், உழவு, கோவில் பூஜைகள் போன்றவற்றிற்காக யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
யானைகளின் குடும்பப்பாசம்:
மிருகங்களும் மனிதர்களைப்போலவே குடும்ப உறவின் முக்கியத்துவத்தை பேணிக்காப்பவையாகும். பருவ்வயதின் காதலிலும் சரி, குட்டியை ஈன்றெடுத்து அவற்றின் நன்மைக்காக தன்வாழ்வை அர்ப்பணித்து கண்காணித்தல், பிற விலங்குகளின் தாக்குதல்களில் இருந்து காத்தல், போன்ற அனைத்து செயல்களிலும் பிற விலங்கினங்களைவிட யானை இனம் ஒருபடி மேலேதான். தனது ஜோடியான பெண் யானை இறந்து விட்டால் அதனுடைய ஆண் யானை சாப்பிடாமல் உடல் மெலிந்துவிடும். பெண் யானையால் தண்ணீர் குடிக்க வர முடியாவிட்டால் ஆண் யானை தும்பிக்கையால் நீரை உறிஞ்சி பெண் யானைக்கு கொண்டுபோய் கொடுக்கும். கருவுற்று இருக்கிற பெண் யானையால் உணவைத் தேடி வெளியே செல்ல முடியாது. அது போன்ற நேரத்தில் ஆண் யானை உணவுகளை சேகரித்து எடுத்துவந்து ஊட்டும். பெண் யானை மீது ஆண் யானை அந்த அளவுக்கு அன்பு செலுத் தும். ஒருபோதும் யானைகள், தன் இனத்தை (கூட்டத்தை) விட்டுக் கொடுக்காது.
தன்வாழ்நாளில் தன் எதிரி என எண்ணம் கொண்டுவிட்டால் அந்த எதிரியை அழிக்கின்ற வரைக்கும் தன் எண்ணத்தை மறக்காது. எதிரியை அழிக்க நினைத்தால் தூக்கத்தில்கூட அதைப் பற்றிய சிந்தனையில் இருக்கும் என்று புறநானூறில் கூறப்பட்டுள்ளது.