மாசியில் வரும் மஹாசிவராத்திரி நாளில் விரதம் இருந்தால் தெரியாமல் செய்த பாவங்களும், தெரிந்தே செய்த பாவங்களும் நீங்கும்.
விரத முறைகள் :
அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம்.
விரதம் மேற்கொள்ளும்போது உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். சில கோவில்களில் தொடர்ந்து அன்னதானம் தருவதுண்டு. அதை உண்ணாமல் இருக்கும் போது உடலும், மனமும் ஒன்றிணைந்து செயல்படும். அதற்காகத்தான் இந்த விரதமே.
அவ்வாறு ஒன்றிணைந்த மனதை இறைவனிடத்தில் செலுத்தி, அவரோடு சிந்தையில் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும். மறுநாள் காலை குளித்து பூஜைகள் செய்து, மீண்டும் சிவாலயங்கள் சென்று விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
சிவராத்திரி அன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன் செல்ல வேண்டும். இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க வேண்டும். சிவனை வழிபடும்போது “சிவாயநம” என உச்சரிக்க வேண்டும். அன்று முழுவதும் சாப்பிடக்கூடாது, முடியாதவர்கள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
முதல் ஜாம பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர், மூன்றாம் ஜாமத்திற்கு வெண்ணெய், நான்காவது ஜாமத்திற்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக கோவிலில் ஒப்படைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கு பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

