” பாலையா உனக்கு நிகர் யாரையா ” அசோகரு நம்ம மகருங்களா?…என்று கேட்கும் காதலிக்க நேரமில்லை விஸ்வநாதன் ஆகட்டும், பிலிப்பைன்ஸ் போயிருக்கான் என்று சொன்னால், என்னது புலிகிட்ட பேசிட்டு இருக்கானான்னு தனக்கு தோன்றியதை கேட்கிற ஊட்டிவரை உறவு, படத்தின் வேதாசலம் ஆகட்டும்.. தொழிலதிபர் வேடங்களில் பாலையா நடித்தார் என்பதைவிட அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்தார்.
காதலிக்கநேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும் சீன் எவ்வளவு பிரபலமோ, அதற்கு நிகரானது ஊட்டிவரைஉறவு படத்தில் காதலியை பற்றி சொல்ல ஆரம்பித்த மகன் சிவாஜியை ஒட்டியபடியே பாலையா செய்யும் அட்டகாசம். அந்த காட்சியையெல்லாம் பார்க்கும்போது தமிழ் சினிமா உண்மையிலேயே பேரதிஷ்டம் செய்த ஒன்றுதான் என்று தோன்றும்.
பாலையாவின்நடிப்பை வில்லன், குணச்சித்திரம் என இருகூறுகளாக போட்டால் அதில் எது அட்டகாசம் என்பது கண்டுபிடிப்பது கஷ்டம். எம்கேடி பாகவதர்-பியு சின்னப்பா சகாப்தத்தில் துவம்ம் செய்த பாலையாவை பலருக்கும் தெரியாது.
1936 லிருந்து 1950 வரை, சதிலீலாவதி, அம்பிகாபதி, மீரா, மந்திரிகுமாரி என பல புகழ் பெற்ற படங்களை இயக்கியவர் அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன்..
எம் கே ராதா எம்ஜிஆர் பாலையா என பெரிய பட்டாளத்தையே சதிலீலாவதி படத்தில் அறிமுகப்படுத்தியவர். உலக சினிமாக்களை கரைத்து குடித்தவர்.
அவரிடம் ஒருமுறை, நீங்கள் பெரிய அளவில் பார்த்து வியக்கும் நடிகர் யார் என கேட்டபோது சொன்னார், அவர் வேறு யாருமல்ல, டிஎஸ் பாலையாவைத்தான்.
மனுசனாய்யா அவன் என்ன ரோல் கொடுத்தாலும் அசத்துற அவ்ளோ டேலன்ட்டான ஆளு….என்று விளக்கமும் கொடுத்தார் டங்கன்.
ஸ்டண்ட்டை தொடாமல் வெறும் உடல் மொழியாலும் வசனத்தாலும் படு பயங்கரமான வில்லத்தனத்தை அசால்ட்டாக செய்து காட்டியவர் ஜாம்பவான் பாலையா.

