சென்னை சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 4 (Terminal 4) தரம் மற்றும் தூய்மையின்மை காரணமாகப் பயணிகளிடையே கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர் அங்குள்ள அவலங்களை வீடியோவாகப் பதிவு செய்து, ‘உலகிலேயே மிக மோசமான விமான நிலையம்’ என்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த வீடியோவில், டெர்மினல் 4-ன் மேற்கூரைத் தூண்கள் (Beams) மற்றும் ஏசி வென்ட்டுகள் (AC Vents) பல வாரங்களாகச் சுத்தம் செய்யப்படாமல், பல அடுக்கு தூசிகளுடன் அசுத்தமாகக் காட்சியளிப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

விமான நிலையத்தின் தரைத்தளத்தில் கடைகள் மற்றும் பயணிகள் அமரும் இடங்கள் பளபளப்பாக இருந்தாலும், சற்று மேலே உற்று நோக்கினால் மேற்கூரைகள் முழுக்கத் தூசிகள் சூழ்ந்து, பராமரிப்பின்றிப் பாழடைந்து கிடப்பதாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு அரசு நிறுவனமாக இருந்தாலும், சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரு விமான நிலையத்தை இவ்வளவு அலட்சியமாகவும் அசுத்தமாகவும் பராமரிப்பது பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

