Home செய்திகள் வெளியே சுற்ற சம்மதிக்காததால் ஆத்திரம்.. ஏழாவது மாடியில் இருந்து குதித்த இளம்பெண்.. சோகம்!

வெளியே சுற்ற சம்மதிக்காததால் ஆத்திரம்.. ஏழாவது மாடியில் இருந்து குதித்த இளம்பெண்.. சோகம்!

 சென்னை ராயபுரம் புதுமனைக்குப்பம் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் மகள் ஹர்ஷிதா (25). சென்னை வேப்பேரியில் உள்ள கல்லூரியில் பிபிஏ பட்டப்படிப்பு படித்து வந்தார்.  ஹர்ஷிதாவுக்கு சிறு வயது முதல் ஒரு காலில் லேசான பிரச்சனை இருந்துள்ளது. அது பெரிய அளவில் வெளியே தெரியவில்லை என்று கூறப்படுகிறது. கல்லூரி படிக்கும் போதே ஹர்ஷிதாவுக்கு சென்னையில் மற்றொரு கல்லூரியில் படித்து வந்த வேப்பேரியை சேர்ந்த தர்ஷன்(26) என்பவருடன் இணையதளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நண்பர்களாக பழகி வந்த இவர்கள் வீட்டிற்கு தெரியாமல் ஆரம்பத்தில் சுற்றி வந்துள்ளனர். இந்த விஷயம் வீட்டிற்கு தெரிய வர, இதனால் வீட்டில் பலமுறை சண்டையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

 அதன் பிறகு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். அப்போது தர்ஷன் ஹர்ஷிதாவை வெளியே சுற்றுவதற்கு அழைத்துள்ளார். அப்போது ஹர்ஷிதாவின் அம்மா திருமண நிச்சயம் முடிந்த பின்னர் வெளியே சுற்ற வேண்டாம். திருமணத்திற்கு பின்னர் வெளியே சுற்றுலாம் என்று கட்டுப்பாடு விதித்துள்ளார். இதை தர்ஷனிடம் கூறியுள்ளார் ஹர்ஷிதா, அதற்கு தர்ஷன், “திருமணத்திற்கு முன்பே என் பேச்சைக் கேட்கவில்லை, எனக்கு மரியாதை கொடுக்கவில்லை” என்ற காரணத்தை கூறி திருமண வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகதொடர்ந்து  இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, இந்த பிரச்சனையை சரி செய்ய ஹர்ஷிதா நேற்று முன்தினம் இரவு வேப்பேரியில் உள்ள தர்ஷனின் வீட்டுக்கு நேரில் சென்றுள்ளார்.

 அப்போது ஹர்ஷிதா,” நீதான் என்னுடைய கணவன் என்று ஆசையாக வாழ்ந்து வருகிறேன். உடலாலும், மனதாலும் உன்னுடன் வாழ்ந்த எனக்கு இன்னொரு கணவனை தேட முடியாது. எனவே நீ என்னுடைய கணவனாக வராவிட்டால் நான் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்று ஹர்ஷிதா தர்ஷனிடம் கூறியதாக தெரிகிறது. இதை சிறிதும் பொருட்படுத்தாத தர்ஷன் அலட்சியமாக அது உன்னுடைய விருப்பம் என்று கூறியுள்ளார். 

இதை கேட்டதும் ஹர்ஷிதா வேகமாக வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். அப்போது அவர் தவறி ஏழாவது தளத்தில் உள்ள பால்கனி மீது விழுந்துள்ளார். அப்போதும் அவர் தர்ஷனிடம், இப்போதாவது என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று கெஞ்சி உள்ளார். மீண்டும் தர்ஷன் மறுக்கவே திடீரென அங்கிருந்து ஹர்ஷிதா கீழே குதித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார் ஹர்ஷிதா.

 காதலன் கண்முன்னே ஹர்ஷிதா உயிரை விட்ட இந்த சம்பவம் வேப்பேரியில் நேற்று முன்தினம் இரவு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேப்பேரி போலீசார், ஹர்ஷிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக தர்ஷன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

 

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ,மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.
 

Exit mobile version