ஸ்ரீபெரும்புதூரில் பிளிப்கார்ட் செயலி மூலம் 79ஆயிரம் கொடுத்து ட்ரோன் கேமிரா வாங்கியவருக்கு பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் அனுப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன்/35.ஏ.சி மெக்கானிக்கான இவரது நண்பர் சுரேஷிற்கு ட்ரோன் கேமிரா தேவைப்பட்டதால் ஆன்லைனில் தேடியுள்ளார். அப்போது
பிளிப்கார்ட் செயலியில் 79064 ரூபாய் மதிப்பில் ட்ரோன் கேமிரா இருந்துள்ளது.
இதற்காக கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி கடந்த 20 ஆம் தேதி ஆர்டர் செய்துள்ளார். கேமிரா பார்சல் இன்று வந்துள்ளது.
பார்சல் மிகவும் தக்கையாக இருந்ததால் சந்தேகம் அடைந்த மொய்தீன், சுரேஷ் ஆகியோர் பார்சலை வீடியோ பதிவுடன் பிரித்துள்ளனர்.
அப்போது பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் டெலிவரி பாயிற்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
பின்னர் இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளனர்.அவர்கள் விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுரேஷ் கூறுகையில் தொழில் வளர்ச்சிக்காக ட்ரோன் கேமிரா கடன் வாங்கி வாங்கியதாகவும் தற்போது இந்த ஏமாற்றம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
