தீபாவளியன்று பட்டாசு வெடித்தால், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் காற்று மாசு அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.காற்றின் தரம் குறைந்துள்ளதால், சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வட்டார தகவல்களின்படி, சென்னையின் மூன்று பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு (AQI) மோசமடைந்துள்ளது. அதன்படி மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210 மற்றும் பெருங்குடியில் 201 ஐ எட்டியுள்ளது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 201-300 க்கு இடைப்பட்ட, காற்றின் தரக்குறியீட்டை “மோசம்” என்று வகைப்படுத்துகிறது, இது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்; 301-400 க்கு இடைப்பட்ட நிலைகள் “மிகவும் மோசமானவை” என வகைப்படுத்தப்படுகின்றன, அதே சமயம் 401-500 க்கு இடைப்பட்ட நிலைகள் கடுமையானதாகக் கருதப்படுகின்றன. மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை:
ஆனால் சென்னையில் தற்போது காற்றின் தரக்குறியீடு 200-ஐ கடந்துள்ளதால், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். அதாவது பெருங்குடி – 262, ஆலந்தூர் – 258, அரும்பாக்கம் – 248, வேளச்சேரியில் 224 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்துள்ளது. மேலும்
கொடுங்கையூர் – 165, மணலி – 189, ராயபுரத்தில் 169 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு உள்ளது
விடிந்த பிறகும் கூட பட்டாசில் இருந்து வெளியான நுண்துகள்கள் பனியுடன் சேர்ந்து சென்னை வான்பரப்பில் மிதந்தபடி காணப்படுகிறது.
ஏற்கனவே காற்று மாசுபாட்டை தவிர்க்க, காலையில் ஒரு மணி நேரம் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் என, தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், நேரக்கட்டுப்பாட்டை மீறி பலரும் பட்டாசுகளை வெடித்ததால், சென்னையில் காற்று மாசுபாடு நிலவுகிறது.
