Home Uncategorized சொகுசு பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயண திட்டம்

சொகுசு பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயண திட்டம்

சென்னையில் 1,559 சாதாரண கட்டண பேருந்துகளில், பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். நகர்ப்புறங்களில், வெள்ளை போர்டு உடைய பேருந்துகளிலும், கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெண்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இத்திட்டத்தை எவ்வித தொய்வுமின்றி செயல்படுத்த, அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. மாநிலம் முழுதும், தினமும் சராசரியாக, 49 லட்சம் பெண்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனால், அரசு பேருந்துகளில் பெண் பயணியரின் எண்ணிக்கையும், 62 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த திட்டத்தை மேம்படுத்த, மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, சொகுசு பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணியரை கணக்கெடுக்கும் பணியை, மாநகர போக்குவரத்துக் கழகம், நடத்துனர்கள் வாயிலாக துவங்கி உள்ளது. பிராட்வே – தாம்பரம், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், திருவான்மியூர், கேளம்பாக்கம், திருவொற்றியூர், பூந்தமல்லி, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில், மாநகர சொகுசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. குறிப்பாக, எந்தெந்த நிறுத்தங்களில் எத்தனை பெண்கள் பயணம் செய்கின்றனர் என்பது குறித்து, தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், சொகுசு பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயண திட்டம் விரிவுபடுத்தப்படலாம் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Exit mobile version