சபரிமலை சன்னிதானத்திற்கு சுத்தமான தண்ணீரை கொண்டு வர குன்னுார் அணையில் இருந்து மேலும் ஒரு குழாய் பதிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
குன்னுார் அணையில் இருந்து சன்னிதானத்திற்கு புதிய தண்ணீர் கொண்டு வர இரண்டு பைப் லைன்கள் இருந்தன. இவற்றில் ஒன்று 2018 வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
மேலும் ஒரு பைப்லைன் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்ய மாநில அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
குன்னுார் அணையில் இருந்து தண்ணீர் வழங்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று தேவசம் துறை அமைச்சர் வி.என். வாசவன் தெரிவித்துள்ளார்
சன்னிதானத்திற்கு குடிநீர் விநியோகம் செய்ய குன்னுார் அணை கடந்த 1953ம் ஆண்டு துவக்கப்பட்டது. சன்னிதானத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் பெரியாறு புலிகள் சரணாலயத்திற்குள் இந்த அணை அமைந்துள்ளது.
மலை உச்சியில் இருந்து வரும் தண்ணீர் அணை மற்றும் குழாய் மூலம் சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
மின்சாரமோ, மோட்டார்களோ பயன்படுத்தாமல் புவியீர்ப்பு விசையால் சன்னிதானம் பண்டிதத்தவலில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் வந்து பல்வேறு இடங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
குன்னுார் அணையில் உள்ள நீர் வழங்கல் அமைப்புகளின் பணிகள் குறித்து இன்று பொறியாளர்கள், தேவசம் போர்டு மின்வாரிய மற்றும் வனத்துறை அலுவலர்கள் இணைந்து மதிப்பீடு செய்தனர்.
