இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கியக் திருக்கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் வசம் உள்ள தங்க இருப்புகளை மத்திய அரசு பணமாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குப் பதிலாக தங்கப் பத்திரங்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் சமூக ஊடகங்களிலும் சில ஊடக நிறுவனங்களிலும் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானவை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கோயில் அறக்கட்டளைகள் அல்லது சமய நிறுவனங்கள் வைத்துள்ள தங்கத்தை மையமாகக் கொண்டு புதிய பணமாக்கும் திட்டத்தை அரசு கொண்டு வரப்போவதாக வெளியாகும் இத்தகைய ஊகங்களும் வதந்திகளும் முற்றிலும் தவறானவை, பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடியவை மற்றும் எவ்வித ஆதாரமும் இல்லாதவை ஆகும்;
அதுமட்டுமின்றி, கோயில்களின் கோபுரங்கள், கதவுகள் அல்லது பிற அமைப்புகளில் பதிக்கப்பட்டுள்ள தங்கத் தகடுகள் அனைத்தும் ‘இந்தியாவின் மூலோபாயத் தங்க இருப்பு’ (Strategic Gold Reserves of India) எனக் கருதப்படும் என்று பரப்பப்படும் செய்திகளும் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை என்று மறுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இத்தகைய சரிபார்க்கப்படாத வதந்திகளை நம்பவோ அல்லது மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என்றும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் அல்லது திட்டங்கள் குறித்த விபரங்களுக்கு அரசு இணையதளங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகவல் தொடர்பு ஊடகங்கள் மூலம் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

