சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை 9 முக்கிய விரைவு ரயில்களின் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, ஆகஸ்ட் 5 முதல் 19 வரை தஞ்சாவூர், மங்களூர், கொல்லம் மற்றும் சேலம் ஆகிய இடங்களிலிருந்து எழும்பூர் வரும் விரைவு ரயில்கள் தாம்பரம் வரையிலும், திருச்சி – எழும்பூர் ராக்ஃபோர்ட் விரைவு ரயில் மாம்பலம் வரையிலும் மட்டுமே இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில், ஆகஸ்ட் 6 முதல் 20 வரை எழும்பூரிலிருந்து புறப்பட வேண்டிய உழவன், மங்களூரு, அனந்தபுரி மற்றும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூருக்குப் பதிலாகத் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்தே புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை இதற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
