சென்னை மாநகரில் ஆவின் நிறுவனம் பச்சை நிற கிரீன் மேஜிக், வெல்வெட் நிற டிலைட், நீல நிறம் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் சூழலில், அதிக வரவேற்பைப் பெற்ற பச்சை நிற ‘கிரீன் மேஜிக்’ பால் பாக்கெட் விநியோகத்தை முழுமையாக நிறுத்த உள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் தினசரி விநியோகிக்கப்படும் 14 லட்சம் லிட்டர் பாலில், 4.5% கொழுப்புச் சத்து கொண்ட இந்த பச்சை நிற பால் மட்டுமே சுமார் 7.5 லட்சம் லிட்டர் அளவுக்கு விற்பனையாகி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இதன் விநியோகம் 60 முதல் 70 சதவீதம் வரை திடீரெனக் குறைக்கப்பட்டு, தற்போது 2.5 லட்சம் லிட்டராகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதலே ஆவின் நிறுவனம் இதன் விற்பனையைப் படிப்படியாகக் குறைத்து வரும் நிலையில், தற்போதைய கோடைக் காலத்தில் ஏற்பட்டுள்ள பால் கொள்முதல் குறைவு மற்றும் ‘கிரீன் மேஜிக்’ பால் விற்பனையால் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்படும் கடும் நிதி இழப்பு ஆகியவையே இந்த விநியோக நிறுத்தத்திற்கான முதன்மைக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
வரும் நாட்களில் இந்த பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை முழுமையாக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுவதால், அன்றாடத் தேவைக்கு ஆவின் பாலை மட்டுமே நம்பியிருக்கும் சென்னை மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
