திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சினேகா தேவ்நாத் 19. டெல்லியில் உள்ள ஆத்ம ராம் சனாதன தர்மா கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவருடைய தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார்.
மாணவி சினேகாவை கடந்த ஏழாம் தேதி முதல் காணவில்லை. கடைசியாக அவர் அன்று அதிகாலை தனது தாயுடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது தனது தோழியை அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர்.
போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே திரிபுரா அரசு மூலம் டெல்லி போலீசுக்கு அழுத்தம் தரப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில், மாணவி கடைசியாக யமுனையின் சிக்னேச்சர் பாலத்தில் நின்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து யமுனையில் தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை. இதற்கிடையே மாணவியின் அறையில் தற்கொலை குறிப்பு கண்டெடுக்கப்பட்டது. அதில் வாழ்வை சுமையாக கருதுவதாக குறிப்பிட்ட அவர், தனது முடிவுக்கு யாரும் காரணம் அல்ல. என எழுதி வைத்துள்ளார். அதன் பிறகு மாணவியின் உடல் கீதா காலனி பகுதியில் யமுனை ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்த அடுத்த கட்ட விசாரணை நடந்து வருகிறது.
