டெல்லி மாநகர மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சாலைப் பள்ளங்கள் மற்றும் சேதமடைந்த சாலைகள் குறித்த புகார்களை இனி ஸ்மார்ட்போன் மூலம் க்யூஆர் கோடை (QR Code) ஸ்கேன் செய்து மிக எளிதாகப் பதிவு செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.
‘நோ யுவர் ரோடு’ (Know Your Road) என்ற திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 1,400 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளில் ஏறத்தாழ 2,500 க்யூஆர் கோடுகள் நிறுவப்பட உள்ளன.
இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் பொதுமக்கள் அந்தச் சாலையின் பராமரிப்பு வரலாறு, மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள், அந்தச் சாலைக்குப் பொறுப்பான அதிகாரிகளின் பெயர்கள், பராமரிப்புப் பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரர்களின் விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்வதோடு, சாலைகள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்து அவற்றின் நிலவரத்தையும் உடனுக்குடன் கண்காணித்துக் கொள்ள முடியும்.
இந்தச் சிறப்பான டிஜிட்டல் தளம் பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் ஆங்கிலம், இந்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மூன்று மொழிகளில் கிடைக்கப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
