எதிர்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு இடமே இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மாற்று எரிபொருட்களை நோக்கித் திரும்புவது காலத்தின் கட்டாயம் என்று வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கவும், எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கவும் ஹைட்ரஜன், சி.என்.ஜி (CNG), எத்தனால், எல்.என்.ஜி (LNG) மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, டீசலுக்கு மாற்றாகத் தூய்மையான எரிசக்தியாகக் கருதப்படும் ஹைட்ரஜன் ரயில்கள் மற்றும் வாகனங்கள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், இத்தகைய மாற்றங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு மாசற்ற இந்தியாவை உருவாக்கவும் உதவும் எனத் தனது உரையில் நிதின் கட்கரி தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன் மூலம் வரும் காலங்களில் பாரம்பரிய எரிபொருட்களைச் சார்ந்திருப்பது முற்றிலுமாகக் குறைந்து, பசுமை எரிசக்தியே போக்குவரத்துத் துறையை வழிநடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
