Home Uncategorized கைலாய மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

கைலாய மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

ஆன்மிகப் பயணிகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், உத்தரகண்ட் மாநிலத்தின் லிபுலேக் கணவாய் (Lipulekh pass) வழியாகக் கைலாய மானசரோவர் யாத்திரை வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.

கோவிட் பெருந்தொற்று மற்றும் கிழக்கு லடாக்கில் இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட ராணுவ மோதல் காரணமாக 2020-ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டிருந்த இந்த யாத்திரை, சுமூக உறவு திரும்பியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கியது; அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை யாத்திரை நடைபெறும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த முறை லிபுலேக் கணவாய் வழியாக மொத்தம் 500 பக்தர்கள், தலா 50 பேர் கொண்ட 10 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

சுமார் 17,000 அடி உயரத்தில் மேற்கொள்ளப்படும் இந்தச் சவாலான பயணத்திற்கான ஆன்லைன் முன்பதிவு மே 19-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், விண்ணப்பதாரர்கள் கணினி மூலம் ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சிவபெருமானின் இருப்பிடமாகக் கருதப்படும் புனிதமான கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரியைத் தரிசிக்கக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஆந்தைரிப்போர்ட்டர் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறது.

Exit mobile version