சுற்றுச்சூழலுக்கு உகந்த தூய்மையான வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், பேட்டரி (மின்சாரம்), ஹைட்ரஜன் மற்றும் இயற்கை எரிவாயு (CNG) மூலம் இயங்கும் வர்த்தக வாகனங்களுக்கான தேசிய அனுமதிப் பயன்பாட்டு வயது வரம்பை கூடுதலாக 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (MoRTH) முன்மொழிந்துள்ளது.
1989-ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளில் கொண்டுவரப்பட உள்ள இந்த வரைவுத் திருத்தத்தின்படி, தற்போது நடைமுறையில் உள்ள 12 மற்றும் 15 ஆண்டுகள் என்ற வாகன வயது வரம்பானது, பசுமை வர்த்தக வாகனங்களுக்கு மட்டும் முறையே 17 மற்றும் 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட உள்ளது.
வர்த்தக வாகன உரிமையாளர்களைப் பெருமளவில் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களில் இருந்து மாற்று எரிபொருளுக்கு மாறச் செய்து அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக ஊக்கமளிப்பதையும், தேசிய அனுமதி (National Permit) பெறும் நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி எளிய முறையில் 5 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் வகையில் வழங்குவதையும் இத்திட்டம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
