ஹோட்டலில் இட்லி சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் என கர்நாடக அரசு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
ஆமாங்க. உணவகங்களில் விற்கப்படும் இட்லியில் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய சாத்தியக்கூறுகளை கண்டறிந்ததாக கர்நாடக அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தென் இந்தியாவில் காலை உணவுகளில் முக்கியமானதாக இடம் பெற்றுள்ள இட்லி, சாலையோர கடைகள் மற்றும் உணவகங்களில் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை ஆய்வு நடத்தியது.
500க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் உணவகங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பிய நிலையில், முதற்கட்ட ஆய்வு முடிவில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட உணவகங்களில் இட்லி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அதில் பெரும்பாலான கடைகளில் இட்லி துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் ஷீட் பயன்படுத்தப்படுவது தெரியவந்ததாகவும், தொடர்ந்து சூடுபடுத்தும் போது பிளாஸ்டிக் ஷீட்டில் இருந்து ‘carcinogenic’ என்ற ரசாயனம் வெளியேறி புற்றுநோய்க்கு வழிவகுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து ஆய்வக முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் அடுத்த கட்ட தகவல்கள் வெளிவரும் என அதிகாரிகள் கூறினர்.
மேலும் மாவு அரைப்பதில் சுகாதாரத்தை பேணுவதில்லை என்றும் தெரிவித்தனர்
இதனிடையே இது குறித்து பேசிய கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், உணவக தயாரிப்புகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

