ஏடன் வளைகுடா பகுதியில், ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்த எண்ணெய் கப்பலுக்கு உதவியதற்காக, நம் நாட்டுக்கு உலக முழுதுமிருந்து பாராட்டுகள் குவிகின்றன.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, 2023 அக்., 7ல் மோதல் துவங்கியதில் இருந்து, ஏடன் வளைகுடா, அரபிக்கடல், செங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
ஈரான் ஆதரவு பெற்ற ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி படையினர் இந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
மீட்பு பணி
சமீபத்தில், ஏடன் வளைகுடா பகுதியில், ஐரோப்பிய நாடான பிரிட்டனின், ‘மார்லின் லுவாண்டா’ என்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடந்ததில், கப்பலின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது.
இதில், 22 இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தனர். இவர்கள் உதவி கோரியதை அடுத்து, நம் கடற்படையினர், ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் போர்க்கப்பல் சம்பவ இடத்துக்குச் சென்று, அந்த கப்பலில் இருந்த தீயை அணைத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டது.
இந்நிலையில், நம் கடற்படையின் இந்த செயலுக்காக, நம் நாட்டுக்கு உலக முழுதுமிருந்து பாராட்டுகள் குவிகின்றன. பிரிட்டன் பத்திரிகையாளர் மார்க் அர்பன் கூறுகையில், ”ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளில் நெருக்கடிகளுக்கு மத்தியில், சீனாவை விட, இந்தியா பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது,” என்றார்.
