Home Uncategorized இது சொல்லும் ஆயிரம் பாடங்கள்!- சிறப்பு கட்டுரை!

இது சொல்லும் ஆயிரம் பாடங்கள்!- சிறப்பு கட்டுரை!

60 ஆண்டுகள்…! 
நம்ப முடியவில்லை. 

1965 ஜூலை 9.
தினத்தந்தியில், 
ஒரு திரைப்பட  விளம்பரம். 
முழுப் பக்கம் இருந்தது. 

அருமை.. 
அபாரம்..
அசத்தல்…
அட்டகாசம்.. 

இன்னும் என்ன வேணும்னாலும் சேர்த்துக்குங்க. 
மனதை கொள்ளை கொண்ட அந்த விளம்பரம்…

இன்று வரை, 
வேறு எந்தத் திரைப்பட விளம்பரமும் இந்த அளவு ‘பாதித்தது’ இல்லை.

எத்தனை பேர் வீட்டில், எத்தனை சுவர்களில் இந்த விளம்பரம் பெரிதாய் ஆக்கிரமித்து இருந்தது..!

நானும்தான்.. கிராமத்து வீட்டின் ஒரே ஒரு அறையில், இந்தப் படத்தை ஒட்டி வைத்திருந்தேன். 

‘ஒரு சினிமா விளம்பரத்தை இப்படி ஒட்டி வைக்கலாமா..?’ என்று அப்போதே என்னைப் பலர் கேட்டது உண்டு. 
ஆனாலும், அது ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது.  

ஒரு மாவீரனைப் போன்ற தோற்றம்; 
ஒரு வாள்… அதை வில்லாக வளைத்து இருகைகளில் பிடித்திருந்த ‘ஸ்டைல்’… வாவ்! 

இதேபோன்று மற்றொரு ‘ஸ்டில்’ – 
ஒரு கப்பலில், கயிறைப் பிடித்துத் தொங்கியவாறு  கதையின் நாயகன், நாயகி…
‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்..’ என்று கூறுவது போல் இருந்தது. 

புரிஞ்சிருக்குமே ..

‘ஆயிரத்தில் ஒருவன்’!

1965 ஜுலை 9 வெளியான,
எம்ஜிஆர் ஜெயலலிதா நம்பியார் நாகேஷ் நடித்த மிகத் தரமான திரைப்படம். 

இன்றளவும் சிறப்பான அரசியல் வசனத்துக்கு இந்தப் படம்தான் மிகப் பொருத்தமான reference ஆகும்.

ஒரு தலைவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இப்படத்தின் ‘மணிமாறன்’ ஒரு நல்ல உதாரணம்.

பிரம்மாண்ட தயாரிப்பு, கருத்துள்ள வசனங்கள், இனிமையான பாடல்கள், உயர்தர நகைச்சுவை (நம்ம நாகேஷ்தான்)  வசீகரிக்கும் நடிப்பு…

இவையெல்லாம் விட, மக்களுக்கு  மிகவும் பயனுள்ள ‘செய்தி’!

எம்ஜிஆர் – ஜெயலலிதா இருவரின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளம் இட்ட படம்.  

சொல்வதற்கு நிறைய இருக்கிறது. 
இப்போதைக்கு, 
ஒன்று மட்டும்.

இன்று இப்படம் குறித்த ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்குப் பல தொலைக்காட்சிகளில் முயற்சித்துப் பார்த்தேன். 
ஊஹூம்.. யாரும் செய்வதாக இல்லை.

வெளியான போதே வரவேற்பு பெறாத குப்பைப் படங்களுக்கு எல்லாம்  
‘இதே நாளில் வெளியானது’ என்று அரைப்பக்க விமர்சனத்தில் நம்  நேரத்தை வீணடிக்கும் நாளிதழ்கள் கூட இன்று இப்படத்தைக் கண்டு கொள்ளவில்லை. 

வேறொன்றுமில்லை… 

‘ஆயிரத்தில் ஒருவன்’  இன்றைக்கும் பலருக்கு அச்சம் ஊட்டுகிறான்!!!

நேரம் இருந்தால், வாய்ப்பு கிடைத்தால், 
வார விடுமுறை நாளில், குடும்பத்தோடு அமர்ந்து பாருங்கள்..

ஒன்றிப் போவீர்கள்.
அதிசயத்தில் ஆனந்திப்பீர்கள்.
விறுவிறுப்பான சுவாரஸ்யமான அனுபவத்தை முடிந்தால் முயற்சித்துப் பாருங்கள்.

அச்சமின்றி ஆடிப் பாட வேண்டும் விடுதலை! 
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை!

அன்புடன் 
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

Exit mobile version