தேரழுந்தூர் கம்ப கழகம் – புதுக்கோட்டை கம்பன் கழகம் ஆகிய இரு கழகங்களின் சார்பில் தேரழுந்தூரில் “கம்பன் விழா” வின் முதல்நாள் நிகழ்வுகள் தொடங்கின.
“கம்பர் மேடு” எனப்படும் கம்பன் வாழ்ந்த மாளிகை இருந்த இடமானது, தற்போது மத்திய தொல்லியல் துறை கட்டுபாட்டில் உள்ளது. இந்த இடத்தில் கவிச்சக்ரவர்த்தி கம்பனை வேண்டி காலை 8.30 மணியளவில் பூஜை நடைபெற்றது.
இதில் கம்பன் கழகத்தார், எழுத்தாளர் திரு.இந்திரா செளந்தர்ராஜன் அவர்கள் உள்ளிட்ட தமிழறிஞர்கள், மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். காலை 10.30 மணியளவில் 108 வைணவத் திருத்தலங்களில் 10 வது திருத்தலமாக விளங்கும் ஸ்ரீ தேவநாத பெருமாள் திருக்கோயிலில் அமைநேதுள்ள கம்பர் சன்னதியில் “கோ பூஜை, இராமாயணத்தின் காண்டம் வாரியான புத்தகங்கள், சீர்வரிசைப் பொருட்களுடன் வைக்கப்பட்டு” விசேஷ பூஜை நடைபெற்றது.
அதன்பின் ஊர்வலமானது மங்கல இசையுடன் புறப்பட்டு, விழா நடைபெறும் கம்பர் திருமண்டபத்தினை அடைந்தது. விழா மண்டபத்தில் முக்கிய பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றி வைக்க, வரவேற்புரையை தேரழுந்தூர் ஜானகிராமன் அவர்கள் வரவேற்க, திரு. இந்திரா செளந்தர்ராஜன் அவகள் சிறப்புரை யாற்றினார். நிகழ்ச்சியினை புதுகை பாரதி அவர்கள் தொகுத்து வழங்கினார்.
விழாக்குழுவின் சார்பில் நிகழ்ச்சிக்காக கம்பன் குறித்து நடைபெற்ற பல்வேறு . போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் மதிய விருந்து பரிமாறப்பட்டது.
இத்துடன் முதல்நாளின் முதற்கட்ட நிகழ்ச்சி நிரல் நிறைவுற்றது. மீண்டும் மாலை 4 மணிக்கு தொடங்கி நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும்.
